கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் தீவிரம்-விழாவை புறக்கணித்த அமைச்சர்கள்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியில் உட்கட்சி பூசல் தீவிரமாகியுள்ளது.
முதல்வர் எடியூரப்பாவின் மீதிருக்கும் அதிருப்தி காரணமாக கட்சியின் முதல் ஆண்டு ஆட்சி நிறைவு விழாவில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இதனால் எதியூரப்பா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 110ல் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து மே 30ம் தேதி எதியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
மேலும் சமீபத்திய மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந் நிலையில் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து பாஜக சார்பில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், இந்த விழாவை 7 மூத்தத அமைச்சர்கள் புறக்கணித்தது முதல்வர் எதியூரப்பாவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
இதையடுத்து கர்நாடக மாநில பாஜகவில் இருக்கும் உட்கட்சி பூசல் வெளியில் தெரிய வந்துள்ளது. விழாவில் பங்கேற்காத 7 அமைச்சர்களில் முக்கியமானவர் மின்சார துறை அமைச்சர் ஈஸ்வரப்பா. குருவா இனத்தைச் சேர்ந்த இவர் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பிற்பட்ட எம்எல்ஏக்களை அணி திரட்டி வருவதாகத் தெரிகிறது.
ஈஸ்வரப்பா பங்கேற்காகது கூட எதியூரப்பாவுக்கு பெரிய அதிர்ச்சி இல்லை. ஆனால், பெல்லாரி பகுதியை சேர்ந்த அமைச்சர்களான கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களது வலதுகலமான அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோர் பங்கேற்காதது தான் எதியூரப்பாவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் இந்த மூவர் தான். பெல்லாரியில் இரும்புத் தாது வெட்டி எடுத்து வரும் சுரங்க அதிபர்களான இவர்கள் தான் கோடிக்கணக்கில் பாஜகவுக்காக தேர்தல் செலவு செய்தனர்.
மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் கெளடா-குமாரசாமிக்கு எதிராகவும் பாஜகவுக்காகவும் தீவிர பிரச்சாரம் செய்தவர்கள். மேலும் ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசி கட்சி மாறச் செய்து பாஜக அரசை ஸ்திரமாக்கியவர்கள்.
கர்நாடாக அமைச்சரவையில் மிகுந்த அதிகாரம் படைத்த இவர்களது கட்டுப்பாட்டில் 20 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களும் இவர்களது ஆதரு எம்எல்ஏக்களான ஆனந்த் அஸ்னோடிகர், பாலசந்திர ஜரகிஹோலி, சிவன கெளடா நாயக் ஆகியோரும் விழாவை புறக்கணித்துள்ளனர்.
முதல்வர் நேரில் வந்து அழைப்பு கொடுக்காததால் இவர்கள் அனைவரும் நிகழ்ச்சியை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் முதல்வரே தங்களை வந்து அழைக்க வேண்டும் என்ற அளவுக்கு அமைச்சர்களான இவர்கள் வளர்ந்துவிட்டது தெளிவாகிறது.
மேலும் இவர்களை கொஞ்சம் கண்ட்ரோலில் வைக்க இவர்களுக்கு ஆதரவான சில போலீஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிரகளை இடமாற்றம் செய்த எதியூரப்பா, சுரங்க தொழிலுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்தார்.
இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications