தடையை நீக்க இந்தியாவுக்கு புலிகள் கோரிக்கை
அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக அதன் தலைமையகம் சார்பில் செயலாளர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்கள இனவாத அரசு எமது தலைமையையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்து விட்டதாக பொய்யான பரப்புரைகளையும் கட்டுக் கதைகளையும் கூறி வருகிறது.
இவ்வாறானா இறுமாப்பான பரப்புரைகளால் எங்கள் மக்களின் விடுதலை உணர்வை அடியோடு அழித்து விடலாம் என சிங்கள அரசு எண்ணுகிறது.
சிங்கள அரசு வெளியுலகிற்கு தெரியாமல் பெரிய அளவில் இனச் சுத்திகரிப்பைச் செய்து வருகிறது. இன்று எங்களது உறவுகள் சொந்த இடங்களை விட்டு விரட்டப்பட்டு குடும்பம், உறவுகளை இழந்து தாங்கொனாத் துயரை அனுபவித்துக் கொண்டு திறந்த வெளிச் சிறைக்குள் அடைபட்டு இன்னல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடுமைகள் செய்கிறார்கள். வயது வந்த ஆண் பிள்ளைகளை விடுதலைப் புலிகள் எனக் கூறி விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் போகச் செய்கிறார்கள். தினம் தினம் நரக வேதனையை அந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள அரசு எமது மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளியுலகிற்கு மறைப்பதற்கு திட்டமிட்ட பல கற்பனைக் கதைகளைக் கூறி வருகிறது. அரசு சார்பற்ற நிறுவனங்களை தன்னிச்சையாக இயங்க விடாமல் தடுக்கிறது. உலக நாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு சிங்கள அரசினால் தயார்ப்படுத்தப்பட்ட பொது மக்களை மட்டுமே அனுமதிக்கிறது.
எங்கள் மக்களின் விடுதலை உணர்வை அழிப்பதற்கு பல வழிகளிலும் எதிரி கங்கனம் கட்டி கூட்டாகச் செயற்பட்டுள்ளான் என்பது மக்கள் நன்கறிந்த உண்மை.
எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்கள், தலைவர்கள் எங்கள் மக்களின் விடுதலைக்கு காட்டி வரும் அபரிமிதமான ஆதரவைக் கண்டு வியந்து நிற்கிறோம். தொடர்ந்து வரும் காலங்களில் இதனை விட அதிகமான ஆதரவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இந்திய அரசு உண்மையான நண்பனை இனம் காணத் தவறியுள்ளதுடன், சிங்கள அரசின் செயற்பாடுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி துணை போகிறது. சிங்கள அரசின் கபடத்தனத்தை உணரும் காலம் விரைவில் வரும்.
இந்திய அரசு எங்கள் மீதான தடையை நீக்குவதற்கு இந்திய மக்கள், அரசியல் தலைவர்கள், அறிவுஜீவிகள் எமது மக்களின் உண்மையான நிலைப்பாட்டை தெரியப்படுத்தி தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.