விடைத்தாள் திருத்தம்-கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிப்பு
நாகர்கோவில்: சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 'மூட்டா' (கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்) ஆசிரியர்கள் தேர்வு தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கியது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நெல்லையில் இருக்கும் பல்கலைகழகம் பகுதியிலும், நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மூட்டா சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தூத்தூர் புனித யூதா கல்லூரி நிர்வாக்த்தின் நிதி நிர்வாக சீர்கேடுகளை அகற்ற வேண்டும் மற்றும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகள் மீது நியாயமான தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சில நாட்களுக்கு முன் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் அவர்கள் இன்று 2ம் தேதி முதல் தேர்வு தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் இன்று போராட்டத்தை துவக்கியுள்ளனர். நெல்லையில் 300 பேரும், நாகர்கோவிலில் 100 பேரும் இப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக விடைதாள் திருத்தும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.