மதிமுக துவண்டு விடவில்லை- வைகோ
சென்னை: மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் மதிமுக துவண்டுவிடாது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட மதிமுக பிரமுகர் இல்லத் திருமணம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.
திருமணத்தை நடத்தி வைத்து பேசிய வைகோ,
இங்கு நான் அதிகம் அரசியல் பேச விரும்பில்லை. தேர்தல் தோல்வி காரணமாக பேச விரும்பவில்லை என்று யாரும் கருத வேண்டாம். திமுக பெற்ற வெற்றி என்பது பணத்தால் பெற்ற வெற்றிதான். என்னுடைய தொகுதியிலேயே ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் வீட்டுக்கு வீடு கொடுத்து சுமார் 40 கோடி ரூபாய் வரை செலவழித்து வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. வைகோ வெற்றி பெறக்கூடாது என்று வியூகம் வகுத்து செயல்பட்டிருக்கிறார்கள். இந்த தோல்வியைக் கண்டு நான் கவலைப்படவில்லை. என் மீது அன்பு கொண்டவர்களும், கட்சி நிர்வாகிகளும் என்னுடைய தோல்வியால் அதிர்ச்சியடைந்து கவலைப்படுகின்றனர். அதுதான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.
இந்தத் தோல்வியால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை. இத்தனை பணபலம், அதிகார பலத்தையும் மீறி எனக்கு 3 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அதிமுக அணி அந்த அளவுக்கு பலமான அணியாகத்தான் இருக்கிறது. மதிமுக இந்த தோல்வியால் சோர்வடையவில்லை.
தமிழக மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். மின்சாரப் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனை என்று தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக நாங்கள் போராடியிருக்கிறோம். உண்ணாவிரதம் இருந்துள்ளோம். நானே நடைபயணம் மேற்கொண்டேன்.
ஆனால் அதுபற்றியெல்லாம் அதிகம் செய்தி வெளியிடாமல் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நான் ஏதாவது பேசினால், அதை பெரியதாக செய்தியாக்கி தமிழக மக்கள் பிரச்சனைக்காக நான் குரல் கொடுக்கவில்லை என்று எழுதுகிறார்கள்.
அதுபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. மதிமுகவைப் எவராலும் குறை சொல்ல முடியாத இயக்கமாக நாங்கள் நடத்தி வருகிறோம். அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வதே தங்களின் கொள்கையாக வைத்திருந்தார்கள். அந்த வழியில்தான் மதிமுகவும் செயல்படும் என்றார்.