இலங்கையின் மறுசீரமைப்புக்கு உதவுவோம்-சீனா
கொழும்பு: இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சர் லியாங் வென்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. இதை தொடர்ந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் வர்த்தக அமைச்சரும், ஆசிய விவகாரங்களுக்காக துணை தலைமை இயக்குனருமான லியாங் வென்டோ கூறுகையில்,
இலங்கையில் அமைதி திரும்பியிருப்பது அந்நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார சீரமைப்பு பணியில் சீனா தொடர்ந்து உதவும்.
போர் முடிந்துவிட்டதை அடுத்து இலங்கை தனது பழைய செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பும் என கருதுகிறோம். தற்போது இலங்கைக்கு என்ன தேவை என்றால் வளர்ச்சிக்கு தேவையான அமைதியான சுற்றுப்புறசூழல் தான். இதன்மூலம் அதிக வெளிநாட்டு மூலதனங்களை பெறலாம். இது போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறையில் நாங்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவோம். இலங்கையில் இருக்கும் புத்த கோவில்களை காண ஏராளமான சீன பயணிகள் வருவார்கள் என்றார் அவர்.