டிக்கெட் தர ஆளில்லாத நாங்குநேரி ரயில் நிலையம்
நாங்குநேரி: நாங்குநேரி ரயில்நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டரே அனைத்து வேலகளையும் செய்து வருவதால் சில சமயங்களில் டிக்கெட் கெளண்டரில் ஆளில்லை என கூறி பயணிகள் குஷியாக இலவச பயணம் செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அப்பகுதி மற்றும் அருகில் இருக்கும் கிராமங்களை சேர்ந்தவர்கள் ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த ரயில் நிலையித்தில் டிக்கெட் தருவது, ரயிலுக்கு சிக்னல் கொடுப்பது, தொலைபேசி தகவல், பயணிகள் குறை கேட்பது மற்றும் நிலைய கட்டுபாடு என அனைத்தையும் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவரே செய்து வருகிறார். இவருக்கு உதவுவதற்கு கூட அங்கு யாரும் பணி அமர்த்தப்படவில்லை.
இதையடுத்து ரயில் வருவதற்கு முன் வரை டிக்கெட் கொடுத்து வரும் அவர் ரயில் வந்தவுடன் சிக்னல் கொடுக்கும் பணிக்கு சென்று விடுகிறார். அப்போது வரும் பயணிகள் டிக்கெட் கொடுக்கும் இடம் காலியாக இருப்பதை பார்த்து டிக்கெட் எடுக்காமல் சென்று விடுகின்றனர்.
அதே போல இந்த ரயில் நிலையத்தில் இறங்குவோரிடம் டிக்கெட் இருக்கிறதா என்று கேட்கவும் ஆளில்லாததால் பலர் மிக மகிழ்ச்சியோடு இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.