புயல் சின்னம்-தமிழகத்திலும் மழை பெய்யும்
சென்னை: வங்க கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயல் சின்னமாக உருவெடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் ஒரிஸ்ஸா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கன மழையும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தின் துவக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். இந்தியாவின் மூன்றில் இரண்டு விவாசாயிகளின் எதிர்பார்ப்பான இந்த மழை இந்த ஆண்டு சற்று முன்னதாக மே மாதமே துவங்கிவிடும் என கூறப்பட்டது.
ஆனால், இரண்டு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதையடுத்து மீண்டும் பழையபடி வெயில் வாட்டியெடுத்தது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை பெய்தது. கும்மிடிப்பூண்டி, தாம்பரம், வடசென்னை, அண்ணா சாலை பகுதிகளில் லேசான மழை பெய்தது. கர்நாடகா, ஆந்திராவின் கடற்கரை பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இந்நிலையில் சென்னை வானிலை மைய செய்தி ஒன்று கூறுகையில்,
வங்க கடலில் ஒரிஸ்ஸாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடக்கு மற்றும் வட கிழக்கு நோக்கி நகரும் அது வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம்.
இதன் காரணமாக ஆந்திராவின் கடற்கரை பகுதிகள், ஒரிஸ்ஸா மற்றும் மேற்கு வங்கத்தில் நல்ல மழை பெய்யும் என கூறப்படுகிறது. கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்யலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான தூறல் அல்லது இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.