தர்மபுரி இந்தியன் ஆயில் குடோனில் தீ விபத்து-ரூ. 1 கோடி நஷ்டம்
தர்மபுரி: தர்மபுரி அருகே இந்தியன் ஆயில் நிறுவன ஏஜென்சியின் குடோனில் தீ பிடித்ததை அடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கான மொத்த விற்பனை ஏஜென்சி நிறுவனம் தர்மபுரியில் உள்ளது. இதை தர்மபுரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எடுத்துள்ளார்.
தர்மபுரி, வள்ளலார் மைதானத்துக்கு அருகில் இருக்கும் அந்த ஆயில் குடோனில் சர்வே லூப்ரிகண்ட் ஆயில்களை சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு ஆயில் குடோனில் திடீரென்று தீப்பிடித்து எரித்தது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். எண்ணெய் பொருட்கள் தீப்பற்றி எரிந்ததால் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து ஏஎப்எப்எப் எனப்படும் நுரையை உருவாக்கி தீயை அணைக்கும் பொருட்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.