பஸ் கட்டண குறைப்பு-அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் பஸ் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஜெயராமன் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
கடந்த ஏப்ரல் 30ம் தேதி தமிழக அரசு சுமார் 60 சதவீதம் அளவுக்கு பஸ் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் நடத்தை விதி மீறல் நடந்துள்ளதாகக் கூறி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் புகார் செய்தனர்.
பஸ் கட்டண குறைப்பு குறித்து தலைமைச் செயலாளரிடம் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்தும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மே 4ம் தேதி முதல் பழைய கட்டணம் அமல்படுத்தப்பட்டது.
அரசு பஸ் கட்டணத்தை குறைத்ததை ஏழை எளிய மக்கள் வரவேற்றார்கள். ஆனால் பஸ் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது அவர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு மனு செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மீண்டும் கட்டண குறைப்பை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், பஸ் கட்டணக் குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாலும், ஏற்கனவே மனுதாரர் இந்தக் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளதாலும் அது குறித்து பரிசீலித்து அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டு மனுவை பைசல் செய்வதாக அறிவித்தனர்.