ஒரு நபர் ஒரு பதவி-அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் காங்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், இனி கட்சியில் பொறுப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதை மக்கள் கிட்டதட்ட மறந்துவிட்டனர். சமீபகாலமாக இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதனால் தேசிய கட்சிகள் இவற்றுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடைசியாக 1984ல் இந்திரா காந்தி மறைவுக்கு பின் காங்கிரஸ் 404 தொகுதிகளில் வென்று முழு பெரும்பான்மையுடன் யாருடைய தயவும் இல்லாமல் ஆட்சி செய்தது. ஆனால், அதன் பின்னர் நடந்து 25 ஆணடுகால தேர்தலில்களில் எந்தவொரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 206 தொகுதிகளில் வென்றது. தனி பெரும்பான்மைக்கு தேவைப்படும் 272 என்ற மேஜிக் நம்பரை எட்டுவதற்கு இன்னும் 66 தொகுதிகளில் வென்றால் போதும் என்பதால் கட்சியை பலப்படுத்த விரும்புகிறது காங்கிரஸ்.
அடுத்த முறை யாருடன் கூட்டணி வைக்காமல் அறுதி பெரும்பான்மையுடன் சிம்மாசனத்தில் அமர வேண்டும் என்பதற்கான வேலைகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் செல்வாக்கை உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து கட்சியில் ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் அமைச்சர் போன்ற மத்திய அரசு பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கட்சி பொறுப்பு அளிக்கப்படாது எனவும், அதே நேரத்தில் ஆட்சியில் பொறுப்பு வகிக்க வேண்டும் என்றால் கட்சி பதவியை விட்டுவிட வேண்டும் என கூறப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அமைச்சர் பதவி வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது.
அவர் ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சியை வலுப்படுத்த தேவயான முயற்சியில் இறங்க போவதாக தெரிகிறது. மேலும் ராகுல் காந்தியின் விருப்பத்துக்கு ஏற்ப கட்சியில் விரைவில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
இதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி கட்சியில் விரைவில் மாற்றங்கள் இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன் அடுத்த கட்டமாக கட்சியில் ஆள் சேர்க்கும் பணி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்தும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications