தலைமை காஜிக்கு எதிராக அதிகாரிகள் சதி-ஆற்காடு இளவரசர்
சென்னை: தமிழக அரசின் தலைமைக் காஜியார் சலாஹுதீன் முகம்மது அயூப்பிடமிருந்து அரசு அதிகாரிகள் மோசடியாக ராஜினாமா கடிதத்தைப் பெற்று இஸ்லாமியர்களை அவமதித்து விட்டனர் என்று ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வக்பு வாரியப் பதவியில் இருந்த காஜியாரிடம், மோசடி செய்து ராஜினாமா கடிதத்தை வாங்கியுள்ளனர் அரசு அதிகாரிகள்.
தலைமைக் காஜிக்கு மிகப் பெரிய அநீதி நடந்துள்ளது. இப்படிச் செய்ததன் மூலம் காஜியாரை மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லீம் மக்களையும் அரசு அதிகாரிகள் இழிவுபடுத்தி விட்டனர்.
தமிழக ஆளுநர் பர்னாலாவும், முதல்வர் கருணாநிதியும் இந்த விவாகரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு தவறு செய்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காஜியாருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது..?
சில நாட்களுக்கு முன்பு காஜியார் அயூப் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், மே 31ம் தேதியன்று தமிழக அரசின் வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி ஜமாலுதீன், தமிழக அரசின் பிற்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் துணைச் செயலாளர் முகம்மது மசூத் ஆகியோர் வந்து என்னை சந்தித்தனர்.
வக்பு வாரியத்தை தமிழக அரசு மாற்றி அமைக்கப் போகிறது. அதற்கு வசதியாக அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டனர். எனவே நீங்களும் ராஜினாமா செய்யுங்கள் என்று கூறினர்.
நானும் அதை நம்பி அவர்கள் காட்டிய ஒரு ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுத் தந்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது, யாரும் அதுபோல ராஜினாமா செய்யவில்லை என்று.
என்னை நீக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு மோசடியாக நடந்து கொண்டு ராஜினாமா கடிதத்தை பெற்று விட்டனர் அதிகாரிகள் என்று கூறியிருந்தார் காஜியார் அயூப் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications