கருணாநிதி கொழும்பு வர ராஜபக்சே அழைப்பு - இலங்கை அமைச்சர் தகவல்
நேற்று சென்னை வந்த தொண்டைமான் முதலில் கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு, அவர்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தொண்டைமான்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்பு வர வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு கொடுத்திருந்தார்.
அதை உறுதி செய்யவே கருணாநிதியை சந்தித்து பேசினேன். இது சம்பந்தமாக கருணாநிதிக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் என்றார்.
இலங்கை துணைத் தூதர் அம்சாவும் ...
ஆறுமுகத் தொண்டைமானுடன் இலங்கை துணைத் தூதர் அம்சா, இலங்கையின் இன்னொரு அமைச்சரான முத்து சிவலிங்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கனிமொழியை சந்தித்தது ஏன்?
முன்னதாக கனிமொழி வீட்டில், செய்தியாளர்களிடம் பேசிய தொண்டைமானிடம், கனிமொழியை சந்தித்தன் நோக்கம் என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு 20 லட்சம் மலையக தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பற்றி பேச வந்தோம்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க 13 (1)-வது அரசியல் திருத்த சட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அதிபர் ராஜபக்சே அறிவித்திருக்கிறார். அது தொடர்பாக இந்திய ஜனாதிபதி, தமிழக முதல்-அமைச்சருக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
இலங்கையில் வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதலில், அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை அழைத்து மறுவாழ்வு செய்து கொடுத்த பிறகுதான் தேர்தல் நடத்த வேண்டும். அரசியல் சட்ட திருத்தத்தை உடனே நிறைவேற்ற, இந்தியா வலியுறுத்தக் கோரி வந்தோம் என்றார்.
ராஜபக்சே சொன்னபடி செய்வாரா என்ற கேள்விக்கு, நம்பிக்கைதான் எல்லாமே என்று பதிலளித்தார் தொண்டைமான்..
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா எந்த மாதிரியான உதவியை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
தொண்டைமான் - இந்தியா தான் அனைத்து உதவிகளையும் செய்து பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் வாழும் அகதிகள் இலங்கை திரும்ப, இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டீர்களா என்ற கேள்விக்கு இதுகுறித்து இலங்கை அரசும், இந்திய அரசும் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்றார் தொண்டைமான்.
பின்னர் கனிமொழியிடம், இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு என்னென்ன உதவிகளை செய்ய உள்ளது? என்று கேட்டபோது, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக ஏற்கனவே இந்திய அரசு ரூ.500 கோடி அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்து முழு ஈடுபாட்டுடன் அறிந்து, அதையும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளது என்றார்.
மேலும், இலங்கைக்கு உண்மை நிலையை கண்டறிய தமிழக அரசியல் தலைவர்கள் அடங்கிய குழு அங்கு செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.