பி.இ-10% மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து!
சென்னை: பின்தங்கிய ஏழை மாணவர்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட 10 சதவீத மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விரைவில் ரத்து செய்யப்பட இருக்கிறது. இச்சலுகை மதிப்பெண் அடிப்படையில் வழங்கப்படும் என தெரிகிறது.
ஏஐசிடிஈ கடந்த 2007ல் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டண ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இதன்மூலம் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த ஏழை மாணவர்கள், ஊனமுற்றோர், மாணவிகள் ஆகியோர் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழக அரசும் அக்டோபர் 2007ல் இந்த திட்டத்தை நிறைவேற்றும் அறிவிப்பை வெளியிட்டு, உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தால் அதை முழுவீச்சில் செயல்படுத்த இயலவில்லை.
இதையடுத்து 2009-10 கல்வி ஆண்டில் இந்த திட்டத்தை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்கத்துடன் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில்,
கட்டண ரத்து சலுகை பெறும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். அதாவது பிளஸ் 2ல் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றின் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் இதை கணக்கு செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருமானம் குறித்த தகவல்களை உடனடியாக பெற வேண்டும். அதில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்டண ரத்து அளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும் 10 சதவீதம் வரை கட்டண ரத்து சலுகை அளிக்கலாம். அதில் பெண்களுக்கு 2 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 3 சதவீதம் மற்றும் 1 சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும் என்ற விகிதத்தில் வழங்கப்பட வேண்டும்.
உடல் ஊனமுற்றோர் பிரிவில் மாணவர்கள் இல்லை என்றால் அதற்குரிய சலுகையை மற்ற பிரிவினருக்கு அளிக்கலாம். கட்டண ரத்து சலுகை அளிக்கும் கல்லூரிகள், அதற்கு பதிலாக கூடுதல் இடங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது சலுகை அளிக்கப்படும் பாடப் பிரிவுகளில், அந்த பாடப் பிரிவின் அனுமதிக்கப்பட்ட மொத்த இடங்களில் 10 சதவீதம் இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி அதில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications