தமிழர் நிலை நினைத்தால் ரத்தம் கொதிக்கிறது-சுஷ்மா

ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து முக்கியமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் சார்பில் பேசிய ஜெயந்தி நடராஜன், ஈழத் தமிழர் நிலை குறித்து கவலை தெரிவித்தார். அதிகாரப்பகிர்வை இலங்கை அரசு செய்தே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதேபோல திமுக சார்பில் பேசிய கனிமொழியும், போர் முடிந்தும் கூட இலங்கையில் தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பது வேதனை தருவதாக தெரிவித்தார்.
இவர்களை விட ஒருபடி மேலே போன பாஜக துணைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், நன்னெறியிலிருந்து ஒரு வாக்கியத்தை இந்தியில் குறிப்பிட்டு ஈழத் தமிழர் நிலையை நினைத்தால் ரத்தம் கொதிப்பதாக வேதனையுடன் தெரிவித்தார்.
சுஷ்மா பேசுகையில், மனித உடலில் ஏதாவது ஓர் அங்கத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கண்கள் கண்ணீர் விடுகின்றன.
இருவர் ரத்தமும் ஒன்றுதான்...
இலங்கையில் வசிப்பவர்கள் இந்தியாவிலிருந்து தூரத்தில் இருக்கலாம். ஆனால், அவர்களது ரத்தமும், நமது ரத்தமும் ஒன்றுதான்.
அவர்கள் துன்பப்படுவதைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. பெண்களும், சிறார்களும் பாதிக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது.
இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் மீது நடத்தப்படும் தாக்குதலையும், குழந்தைகள் பசியால் தவிப்பதையும் பார்த்துக் கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? என்றார் சுஷ்மா.
பின்னர் நன்னெறியில் வரும் "பெரியவர்தம் நோய் போல் பிறர் நோய் கண்டுள்ளம்'' என்று தொடங்கும் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. உண்மை நிலையைக் கண்டறிய இந்தியாவிலிருந்து எம்.பிக்கள் குழுவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும்.
கஜகஸ்தானில் இஸ்கான் கோயில் தாக்கப்பட்டது, பிரான்ஸில் சீக்கியர்கள் டர்பன் அணியத் தடை விதிக்கப்பட்டது, பாகிஸ்தானில் இந்துக்கள் மீது ஜஸியா வரி விதித்தது என உலகம் முழுவதும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அணு ஆயுத சோதனை செய்யும் உரிமையை இந்தியா விட்டுவிட்டது என்றார்.
ஈழத் தமிழர் பிரச்சினை, ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது தாக்குதல், சீக்கியர்களுக்கு டர்பன் தடை என சுஷ்மா பேசியபோதெல்லாம் கம்மென்று இருந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சுஷ்மா, அணு சக்தி ஒப்பந்தம் குறித்துப் பேசியபோது மட்டும் படாரென்று எழுந்து சுஷ்மாவின் வாதத்தை மறுத்து பேசினார்.












Click it and Unblock the Notifications