'லீவு'-29 மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
சென்னை: சென்னை மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்திய சுகாதார துறை அதிகாரிகள் சொல்லாமல், கொள்ளாமல் லீவு போட்ட 29 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சென்னை மருத்துவமனை ஊழியர்கள் பலரும் கும்பலாக அடிக்கடி சொல்லாமல் விடுமுறை எடுத்து கொள்வதாகவும், இதனால் அலுவலக பணிகள் கடுமையாக பாதித்து வருவதாகவும் தமிழக சுகாதார துறை அமைச்சகத்துக்கு புகார் வந்தது.
இதையடுத்து நேற்று சுகாதார துறை சிறப்பு செயலாளர் தலைமையில் சென்னை பொது மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் அங்குள்ள சமையலறை வரை அனைத்தையும் சோதித்து பார்த்தனர்.
மேலும் பல ஊழியர்கள் பணியில் இல்லை என்பதையும், அவர்கள் விடுமுறை கடிதம் உள்ளிட்ட எந்த தகவலும் கொடுக்காமல் விடுமுறை எடுத்து கொண்டதும் தெரிய வந்தது.
இது குறித்து மருத்துவமனையின் டீன் மோகனசுந்தரம் கூறுகையில், நேற்று 29 ஊழியர்கள் எந்த தகவலும் கொடுக்காமல் விடுமுறை எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 21 பேர் பெண் ஊழியர்கள். இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் மருத்துவமனையின் சுகாதாரத்தை காக்க வேண்டிய பணியில் இருப்பவர்கள். இது போன்ற அத்தியாவசிய பணியில் இருப்பவர்கள் கும்பலாக ஒரே நாளில் அனுமதி பெறாமல் விடுமுறை எடுப்பதால் இருக்கும் ஊழியர்களை வைத்து அனைத்து வேலைகளையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்றார்.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எச்சரிக்கை...
இது குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் கூறுகையில், இந்த அதிரடி சோதனை மூலம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம். இவர்கள் 29 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மற்ற அனைவருக்கும் நல்ல பாடமாக இருக்கும் என நம்புகிறேன்.
மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் இது போன்ற அதிரடி சோதனைகள் தொடரும் என்றார்.