ஈழத் தமிழர்களுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் - பிரதமருக்கு திமுக கோரிக்கை
டெல்லி: ஈழத் தமிழர் மறு வாழ்வுக்கு மத்திய அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை இரு தலைவர்களையும் நேரில் சந்தித்த திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.
கருணாநிதி நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்குப்பிறகு டெல்லி சென்ற போது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து இலங்கையில் ராணுவ தாக்குதலால் வீடிழந்தும் உடைமைகளை இழந்தும் தவிக்கும் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் மறுவாழ்வுக்காகவும் மத்திய அரசு குறைந்தது 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதன்படி அப்போது உடனடியாக 100 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இலங்கை தமிழர்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதையடுத்து மன்மோகன்சிங் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நேற்று மக்களவையில் அறிவித்தார்.
இதற்கு கருணாநிதி சார்பில் நேற்று நாடாளுமன்ற கழக குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
அப்போது பிரதமரிடம், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக முதல்-அமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியதின் பேரில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். எனவே மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கருணாநிதி சார்பில் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்நாட்டுப் பிரச்சினைக்கு அணுகலாம்...
அதற்கு பிரதமர், தமிழ்நாட்டின் மீதும் இலங்கை தமிழர்கள் மீதும் எனக்கு எப்போதும் தனி அக்கறை உண்டு. தாங்கள் தமிழ்நாட்டின் பிரச்சினைகளுக்கு எந்த நேரமும் என்னை அணுகலாம் என்று பிரதமர் உறுதியளித்தாராம்.
அதேபோல சோனியா காந்தியையும் பார்த்த திமுக எம்.பிக்கள் அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க மத்திய அரசு மேலும் என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்வதற்கு பிரதமரிடம் பரிந்துரை செய்வேன் என்று சோனியா தெரிவித்தாராம்.
சபாநாயகர் மீரா குமாரையும் சந்தித்து திமுக குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.