For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் இட ஒதுக்கீடு: 20%ஆக குறைக்க திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பெண்கள் மசோதாவுக்கு சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகிய மூன்று முக்கிய வட இந்தியத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், மகளிருக்கான இட ஒதுக்கீட்டு அளவை 33 சதவீதம் என்பதிலிருந்து 20 சதவீதமாக குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியவில்லை. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு பெரிய கட்சிகளின் ஆதரவு உள்ள போதிலும், லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட பல வட இந்தியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றனர்.

ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்தியில் மீண்டும் ஆட்சியைப்பிடித்துள்ள காங்கிரஸ் அரசு இந்த தடவை பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது.

மன்மோகன் சிங்கின் 100 நாள் திட்டங்களில் ஒன்றாக 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மறுபடியும் சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

குறிப்பாக சரத் யாதவ், இந்த மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டால் நான் நாடாளுமன்றத்திலேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

அதேபோல லாலுவும், முலாயமும் கூட மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

உமாபாரதி, ஜெயப்பிரதா உள்ளிட்டோரும் கூட இந்த மசோதாவை எதிர்க்கின்றனர்.

இந்த ஒதுக்கீட்டு மசோதாவில் ஏகப்பட்ட குறைகள் உள்ளன என்று பரவலாக கருத்து நிலவுவதால் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் திருத்தம் செய்ய அரசு யோசித்து வருகிறது.

முதல் கட்டமாக 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை 20 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சில திருத்தங்களையும் கொண்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங் யோசித்து வருவதாக தெரிகிறது.

இப்படிச் செய்து, அனைத்துத் தரப்பையும் சரிக் கட்டி மசோதாவை நிறைவேற்றி விட காங்கிரஸ் கூட்டணி அரசு முயல்வதாக தெரிகிறது.

எப்படியாவது மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட வேண்டும் என்ற வேகத்தில் மத்திய அரசு உள்ளதால், கூறப்படும் மாற்றங்களைச் செய்து மசோதாவை நிறைவேற்ற அது குறியாக உள்ளது.

இதற்கிடையே, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று நடந்த விவாதத்தில் ராஷ்டீரிய ஜனாத தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் கல்யாண் சிங் ஆகியோர் பேசினார்.

கல்யாண் சிங் கூறுகையில்,

பெண்கள் மசோதாவில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,

பெண்கள் மசோதாவில் முலாயம் சிங் யாதவ் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறினார். அது என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்கப் போகிறேன். பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால், பெண்கள் மசோதாவை தற்போதைய வடிவத்திலே நிறைவேற்றினால் அது பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு உதவாது என்பதை தான் கூறுகிறோம்.

பாஜக, காங். கூட்டு சதி திட்டம்...

இதன்மூலம் அந்த மக்களுக்கு போராடி வரும் மாநில கட்சிகளை அளிக்க முயற்சிக்கிறார்கள். பெண்கள் மசோதாவுக்குள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சதி திட்டத்தி்ல் ஆளும் காங்கிரசும், பாஜகவும் இணைந்து செயல்படுகின்றன.

மற்றதுக்கு எங்கே போவார்கள்...

ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமையை ரூ. 3க்கு வழங்கப்போவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அப்படி என்றால் கடுமையான விலையில் விற்கப்படும் எண்ணெய், பருப்பு மற்றும் காய்கறி ஆகியவற்றை மக்கள் வாங்க வேண்டாமா?

அவர்கள் அதை எப்படி வாங்குவது? ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டும் வேலை கொடுத்தால் போதுமா? மற்ற நாட்களில் அவர்கள் உணவுக்கு என்ன செய்வார்கள்?

மாற்றாந்தாய் மனப்போக்கு...

நீண்டகாலமாகவே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பீகார் நடத்தப்படுகிறது. பீகார் மாநிலத்தை சிறப்பாக கவனிக்காவிட்டால், நக்சலைட்டுகள் பாதையில் அந்த மாநிலம் செல்லும் அபாயம் ஏற்படும் என்றார் லாலு பிரசாத் யாதவ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X