தமிழக மீனவர்கள் 9 பேரை கடத்தி இலங்கை கடற்படை அட்டகாசம்
சென்னை: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை இலங்கைக் கடற்படை கடத்திச் சென்று விட்டது. இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. 45 நாள் மீன் பிடித் தடைக்குப் பின்னர் கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குப் போய் வருகின்றனர்.
ஆனால் தமிழக மீனவர்களை பிடித்து அடிப்பதும், மீன் வலைகளை அறுத்தெறிவதும், மிரட்டுவதாக ரவுடித்தனம் செய்து வருகிறது இலங்கை கடற்படை.
நேற்று முன்தினம் காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக 4 குட்டி கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.
அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை கண்டதும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து சென்று விடுமாறு மீனவர்களை எச்சரித்தனர். பயந்து போன மீனவர்கள் கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையை எடுத்துக் கொண்டு கரைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் அவர்கள் 25-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் மீன்களை பறித்துவிட்டு மீனவர்களை விரட்டி அடித்தனர்.
மேலும், தேவதாஸ், பைராம் கான் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் இருந்த மீனவர்கள் காளிமுத்து, கோட்டைச்சாமி, ரவி, காளீசுவரன், மாரி, ஜார்ஜ், பாபு, அலாவுதீன், கோவிந்தராஜ் ஆகிய 9 மீனவர்களையும், 2 படகுகளையும் பிடித்து சென்றனர்.
நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர், போலீஸ் துணை சூப்பிரண்டு கமலாபாய், தாசில்தார் ராஜாராமன் ஆகியோரிடம் புகார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட 9 தமிழக மீனவர்களும் தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டு அங்கு கோர்ட்டில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் அந்தோணியார் கோவில் வளாகத்தில் நடந்தது.
அதில், இலங்கை கடற்படையினரால் 2 படகுகளையும், 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றதை கண்டிக்கிறோம்.
இலங்கை அரசின் அட்டூழியத்தை கண்டித்தும், கடத்தப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்டுத்தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (நேற்று) முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது.
வருகிற 13-ந் தேதிக்குள் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் 13-ந் தேதி (சனிக்கிழமை) தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையிலும், தமிழக விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் வேணுகோபால், என்.ஜெ.போஸ் ஆகியோர் முன்னிலையிலும் அனைத்து மீனவர் சங்கங்களும், மீனவ மகளிர் சங்கங்களும் இணைந்து மாலை 4 மணி அளவில் ராமேசுவரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது.
இலங்கையில் இருந்து மீன்பிடிக்க வந்த 31 படகுகளையும், 93 மீனவர்களையும் நீண்ட நாட்களாக இந்தியா விடுவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
7 சென்னை மீனவர்களும் மாயம்..
இதேபோல சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மகேந்திரன், தங்கராஜ், அழகிரி, டிக்கன், நிக்தீஷ், பாபு, அந்தோணி ஆகிய மீனவர்கள் மே 30ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடிக்கப் போய் பத்து நாட்களாகியும் அவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
இவர்களையும் இலங்கை கடற்படை அட்டூழியக்காரர்கள் பிடித்துச் சென்று விட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.