4 இலங்கை தமிழ் எம்பிக்களின் பதவிக்கு ஆபத்து
கொழும்பு: கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்காமல் உள்ள இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நான்கு எம்.பிக்களின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
விடுமுறை கோரி அவர்கள் கொடுத்துள்ள விண்ணப்பம் குறித்து நாடாளுமன்றம் முடிவு எதையும் அறிவிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்களான செல்வன் அடைக்கலநாதன், கஜேந்திரன் பொன்னம்பலம், ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.
இவர்களில் சிலர் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் 4 பேரும் 3 மாத விடுமுறை கோரி விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது அமைச்சரும், அரசுக் கொறடாவுமான திணேஷ் குணவர்த்தனே பேசுகையில், நான்கு பேரும் இலங்கை அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே இவர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என்றார்.
அவருக்கு ஆதரவாக மேலும் பல அரசு எம்.பிக்களும் பேசினர். தற்போது நான்கு பேரும் எங்கு உள்ளனர் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இந்த நால்வர் குறித்தும் விசாரணை நடைபெறும் எனவும் அதுவரை நான்கு பேரின் விடுப்பு விண்ணப்பமும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் லோகுபண்டாரா தெரிவித்தார்.