காதலனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பெண்!
சென்னை: காதலனை அடித்துக் கொன்று, செப்டிக் டேங்கில் போட்டுவிட்டு தப்பிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மதுரவயலுக்கு அருகே பள்ளிகுப்பம் பகுதியில் வசித்தவர் ஜெயகாந்தன் (45). இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தவர். இவருக்கும் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த அருணா (34) என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்யாமலேயே சென்னையில் பல இடங்களில் வீடு எடுத்து தங்கி கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகுப்பம் வந்தனர். நேற்று திடீரென்று அருணா மட்டும் வீட்டின் சொந்தக்காரரிடம் சென்று நாங்கள் வீட்டை காலி செய்கிறோம். அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுங்கள் என கூறியுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு பணம் தருவதாகக் கூறியுள்ளார். வீட்டுக்குள் வந்த அவருக்கு துர்நாற்றம் வீசியது.
எலி செத்துவிட்ட நாற்றம் என்று அருணா கூறினார்.
ஆனாலும் அதை நம்பாத அவர் செப்டிக் டேங்க்கை திறந்து பார்த்தார் வீட்டு உரிமையாளர். அதில் ஜெயகாந்தனின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அருணாவை கைது செய்தனர்.
விசாரணையில் அருணா கூறுகையில்,
கடந்த 7ம் தேதி இரவு தான் வெளியே சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்தேன். ஏன் தாமதம் என்று கேட்டு என்னை ஜெயகாந்தன் அடித்தார். இதையடுத்து எங்களுக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது தயிர் கடையும் மத்தால் அவர் தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் தலை பிளந்து மரணம் அடைந்தார்.
இதையடுத்து பிணத்தை செப்டிக் டேங்கில் போட்டு மூடினேன். ஆனால், அதிலிருந்து அதிக துர்நாற்றம் வந்ததால் வீட்டை காலி செய்துவிட்டு போக நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
தண்ணீருக்குள் மூழ்கடித்து பெண் கொலை..
சென்னை அம்பத்தூரில், தண்ணீர் பாத்திரத்தில் தலையை மூழ்கடித்து மின்வாரிய அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார். நகைக்காக இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது.
மின்வாரிய அதிகாரியாக பணியாற்றும் சீனிவாச ராகவனின் இரண்டாவது மனைவி வள்ளி (40). வள்ளிக்கு சொந்தமாக மினி லாரி உள்ளது. அதை குளிர்பான கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். அதன் வரவு செலவு கணக்குகளை வள்ளியே பார்த்து வந்தார்.
சீனிவாச ராகவன் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் வள்ளி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் சீனிவாச ராகவன் வீடு திரும்பியபோது வீடு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது. டி.வி. சத்தமாக ஓடிக் கொண்டிருந்தது.
அவரது மனைவி வள்ளி குளியலறையில் நீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் தலை மூழ்கடித்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
வள்ளியின் நகைகள் திருடு போயிருந்தன. வீட்டிலிருந்த இரு செல்போன்களும் மாயமாகியுள்ளன.
வீட்டு வரவேற்பறை மேஜையில் 3 டீ குடித்த டம்பளர்கள் இருந்தன. வீட்டுக்கு வெளியே 2 மோட்டார் சைக்கிள்கள் நின்றிருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வள்ளி மினி லாரி வைத்திருந்ததால் அதன் டிரைவர், கிளீனர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து போவது வழக்கமாம். எனவே டிரைவர்கள் யாராவது இந்தக் கொலையை செய்து நகைககளை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு உள்ளது.
வள்ளியை தந்தை இரண்டாவது திருமணம் செய்தது பிடிக்காத அவரது மகனும் மகளும் தந்தையைப் பிரிந்து தனியே வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அம்பத்தூர் பகுதியில் தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 மாதங்களில் வள்ளியுடன் சேர்த்து 3 பெண்கள் கொல்லப்பட்டிருப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
செல்போன் அதிபர் கொலை-பங்குதாரர் கைது...
இதறகிடையே சென்னை நந்தனத்தில் விகாஸ் சிஸ்டம் என்ற பெயரில் செல்போன் நிறுவனம் நடத்தி வந்த சங்கர் திவாகரன் (55) என்பவர் கொலையான வழக்கில் மதுரையைச் சேர்ந்த அவரது தொழில் பார்ட்னர் ராஜாமணி (49) கைது செய்யப்பட்டுள்ளார்.
கே.கே.நகரில் வசிக்கும் தனது வக்கீலைப் பார்த்துவிட்டு காரில் ஏற முயன்றபோது சங்கர் திவாகரனை 4 பேர் அரிவாளால் வெட்டினர்.
இந்த வழக்கை 6 தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதில் ராஜாமணிதான் கூலிப்படையை அனுப்பியது என்று தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
லாபத்தை பிரி்ப்பதில் ஏற்பட்ட மோதலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவன் ஒருவனுக்கு ரூ.3 லட்சம் தந்து திவாகரனைக் கொன்றதாக ராஜாமணி கூறியுள்ளார். அந்தக் கூலிப் படைக்கு வலை வீசப்பட்டுள்ளது.