ஏர் பிரான்ஸ் விமான விபத்துக்கு தீவிரவாதம் காரணமா?

அந்த விமானத்தில் பயணம் செய்து இறந்து போன பயணிகளில் இருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் ரகசிய போலீஸார் கண்டுபிடித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதலாக இது இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு ரகசியப் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரு பயணிகளின் பெயர்களும், அல் கொய்தா தீவிரவாதிகளின் பெயர்களைப் போலவே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு பெயர்களும் பிரான்ஸுக்கு மிரட்டலானவர்கள் என கருதப்படும் தீவிரவாதிகளின் பெயர்ப் பட்டியலில் உள்ளதைப் போலவே இருப்பதால்தான் இந்த சந்தேகம் வந்துள்ளது. இருப்பினும் இதை வைத்து முழுமையாக இது தீவிரவாத தாக்குதல் என்று கருதி விட முடியாது என்றும் பிரான்ஸ் கருதுகிறது.
இருப்பினும் இதே கோணத்தில் விசாரணையைக் கொண்டு போகக் கூடாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் ஆன்ட்ரூ தாமஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பயணிகளின் பட்டியலில் உள்ள இருவரின் பெயர்கள், தீவிரவாத அமைப்புடன் (அல் கொய்தா) ஒத்துப் போகிறது என்ற ஒரே காரணத்திற்காக நாம் தீவிரவாத தாக்குதல் என்ற முடிவுக்கு வந்து விடக் கூடாது.
ஆழமான, தீவிரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அனைத்தையும் ஆராய வேண்டும். பின்னரே முடிவுக்கு வர வேண்டும்.
இந்த விமானத்தை நாங்கள் வீழ்த்தினோம் என்று எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
மேலும், இதுபோன்ற சதித் திட்டம் இருப்பதாக எந்த உளவு அமைப்பும் எந்த நாட்டையும் எச்சரிக்கவில்லை. மேலும், தீவிரவாத அமைப்புகள் ஒரு செயலை நடத்தி முடித்தவுடன் அதுகுறித்து தகவல்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட பேச்சு எதையும் உளவு அமைப்புகள் ஒட்டுக் கேட்கவில்லை.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பல மாதங்களாக பொறுப்பேற்காமல் இருந்தது. பின்னர்தான் அதை ஒப்புக் கொண்டது. அதேபோல இதுவும் இருக்கலாம். இருப்பினும் அதை உறுதியாக கூறி விட முடியாது.
முன்பு 1988ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் லாக்கர்பீ மீது பிறந்து கொண்டிருந்த பான் ஆம் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அதை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. பின்னர் லிபியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இன்று வரை அவர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்புப் பெட்டிகள் கிடைக்கும் வரை அனைத்து வகையான ஊகங்களும் வரத்தான் செய்யும். கருப்புப் பெட்டி கிடைத்தால்தான் உண்மை தெரியும் என்றார் தாமஸ்.
இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகளை தேடும் பணியில் பிரெஞ்சு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அது கிடைத்தால்தான் விமானத்தில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
ஆரம்பத்தில் கடலில் ஏற்பட்ட புயல் அல்லது இயற்கைச் சீற்றம் அல்லது மின்னலால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பின்னர் விமானம் அதி வேகமாகப் போயிருக்கலாம். அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதை நிரூபிப்பது போல ஏர் பஸ் ரக விமானங்களில் வேகத்தைக் காட்டும் கருவிகளில் குழப்பங்கள் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த 2வது சந்தேகம்தான் வலுவாகிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications