எஸ்.எம்.கிருஷ்ணா-இலங்கை தமிழ் எம்பிக்கள் சந்திப்பு
டெல்லி: டெல்லி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பிக்கள் குழு டெல்லி வந்து கிருஷ்ணாவை சந்தித்தது.
அப்போது, வன்னியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்களை விரைவில் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசை நிர்ப்பந்திக்குமாறு இந்தியாவுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் முகாம்களில் தங்கியிருந்து இப்போது காணாமல் போய் விட்டதாக கூறப்படும் 13000 தமிழ் இளைஞர்கள் கதி என்ன என்பதை அறி்நது அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கிருஷ்ணாவை கேட்டுக் கொண்டனர்.
மேலும் போர் நடந்த பகுதிகளில் ராணுவ முகாம்களை அமைக்கக் கூடாது என இலங்கை அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கிருஷ்ணாவிடம் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் இயக்கப் போராளிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க இந்தியா உதவ வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இலங்கைப் பிரச்சினைக்கு, அனைத்து சமூகத்தினரும் ஏற்கக்கூடிய, தமிழ் மக்கள் கெளரவமாக வாழ வழி செய்யும் வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தியதாகவும், இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை என்று கருதுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் 13-வது அரசியல் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும், அதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.