கருணாநிதி-கொங்கு நாடு கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை கொங்கு நாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்தித்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
லோக்சபா தேர்தலின்போது உருவான கட்சி கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். மேற்கு மண்டலத்தில் இந்தக் கட்சி கணிசமான வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் மண்ணைக் கவ்வ நேரிட்டது.
வலுவான ஜாதிக் கட்சியாக உருவெடுத்திருக்கும் கொங்கு நாடு முன்னேற்றக் கழக கட்சியின் நிர்வாகிகள் அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
அவருடன் கெளரவத் தலைவர் தேவராஜன், பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரும் அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமசாமி பேசுகையில், தமிழகத்தில் உள்ள தென்னை, பனை மர விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமானால், கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தினோம்.
கள் இறக்குவது கூடாது எனவோ, தவறு எனவோ முதல்வர் கருணாநிதி கூறவில்லை. ஆனால் கள்ளால் எந்த நோயும் பரவாமல் தடுப்பது அவசியம் என அவர் கருதுகிறார்.
மேலும் கள் இறக்க அனுமதித்தால் அதை எவ்வாறு முறைப்படுத்தி செயல்படுத்துவது என்பது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராயவே நீதிபதி சிவசுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழுவின் அறிக்கை வரும் வரை பொறுமையாக இருக்குமாறும் அவர் கூறினார்.
எங்களது அனைத்து கோரிக்கைகள் குறித்தும் நிச்சயம் பரிசீலிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்பது வெறுமனே தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும் கட்சி அல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்த வைப்பதே எங்கள் நோக்கம்.
அந்த அடிப்படையிலேயே இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளோம் என்றார் ராமசாமி.