பாளை மத்திய சிறையில் கைதிகள் மோதல்-இருவர் மண்டை உடைந்தது
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் இரு கைதிகளின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாளை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 1,600 பேர் உள்ளனர். இவர்களை சுமார் 180க்கும் மேற்பட்ட போலீசார் காவல் காத்து வருகின்றனர்.
இந்த சிறையில் தூத்துக்குடியை சேர்ந்த குட்டி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டுள்ளார். இவர் உள் சிறையில் 4ம் பிளாக்கில் உள்ளார். இங்கு இவருடன் சுமார் 100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதே வரிசையில் 7ம் பிளாக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் தவசி, ஜெயராஜ், செல்லத்துரை உட்பட 70 பேர் இருக்கின்றனர்.
இதில் தவசி, ஜெயராஜ், செல்லத்துரை ஆகியோர் அவ்வப்போது தண்ணீர் பிடிக்கும்போது 4ம் பிளாக்கிலுள்ள குட்டி, முருகன், சிவா உள்ளிட்ட சில கைதிகளிடம் தகராறு செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையில் குட்டி தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தவசி, ஜெயராஜ், செல்லத்துரை ஆகியோர் குட்டி உள்பட இரு கைதிகளிடம் வாக்குவாதம் செய்து கல்லால் தாக்கினர். இதில் குட்டி உள்பட இரு கைதிகளின் மண்டை உடைந்தது.
இதனை கண்ட 7ம் பிளாக் கைதிகள் தவசி, ஜெயராஜ், செல்லத்துரை உட்பட 10க்கும் மேற்பட்ட கைதிகளிடம் வாக்குவாதம் செய்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
காயமடைந்த குட்டி உள்ளிட்ட இருவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கைதிகள் தவசி, ஜெயராஜ், செல்லத்துரை ஆகியோர் தனிசிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications