ராமநாதபுரம் குடிநீ்ர் திட்டம் 24வது புனிதத் தீர்த்தம்-ஸ்டாலின்
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்பட மொத்தம் 23 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. தற்போது மக்களின் தாகம் தீர்க்கும் 24வது புனித தீர்த்தமாக இந்த ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்துள்ளது என்று துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
அவர் கூறுகையி்ல்,
முனிவர் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரி நீரை காகத்தின் உருவில் வந்து விநாயகர் விடுவித்து காவிரி ஆறாக ஓடவிட்டு சோழ நாடு சோறுடைத்து என்று மாற்றியதாக புராணத்தில் சொல்வார்கள்.
அதுபோல ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க முதல்வர் கருணாநிதி இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். புராணத்தில் சொன்னது கற்பனை. ஆனால் இது நிஜக் கதை. இதை மக்கள் மறந்து விடக் கூடாது.
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்பட மொத்தம் 23 புனிதத் தீர்த்தங்கள் உள்ளன. தற்போது மக்களின் தாகம் தீர்க்கும் 24வது புனித தீர்த்தமாக இந்த ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த போது முதல் பட்ஜெட்டிலேயே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று அது செயல்படுத்தப்பட்டுவிட்டது.
கடந்த 30.1.2007ல் அடிக்கல் நாட்டப்பட்டபோது, இத் திட்டத்தை 2 ஆண்டுகளில் முடித்துத் தந்தால் அந்த அதிகாரிகளுக்குப் பரிசளிப்பேன் என்று முதல்வர் அறிவித்ததாக செய்தி கிடைத்ததும் அதிகாரிகளை அழைத்துப் பேசினேன்.
இது ஒரு மகத்தான திட்டம் என்பதால், "முடியும் என்றால் மட்டும் முடியும் என்று சொல்லுங்கள்'' என்றேன். "முடியும்' என்றார்கள். விடுமுறை நாள்களிலும் கூட உழைத்தார்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின் காரணமாக இத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலை வந்து விடுமோ என்ற நிலையிலும் இத் திட்டத்தை நிறைவேற்றியமைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் என்ற முறையில் அத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அவர்கள் அனைவருக்கும் 2 நாட்களில் பரிசுகள் வழங்கப்படும்.
கடந்த 1989ல் திமுக ஆட்சிக் காலத்தில் தர்மபுரியில் முதல் முதலாக முதல்வர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. மகளிர் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்காகத் தான் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
கடந்த ஆட்சிக் காலத்தில் 77,027 மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 76 கோடி மட்டும் வழங்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற 3 வருட காலத்தில் மட்டுமே 2,32,000 குழுக்களை உருவாக்கி அவர்களுக்கு ரூ. 288 கோடி இதுவரை சுழல் நிதி வழங்கியுள்ளோம்.
மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் வங்கிகளில் பெற்ற கடனை சரியான நேரத்தில் முறையாக திரும்ப செலுத்தும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக உள்ளது. இது உங்களால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை.
தமிழகம் தலை நிமிர சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வது கலைஞர் அரசு.
மக்களவைத் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெற, தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம். அதுவே தேர்தலில் வெற்றியின் ரகசியம் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications