மாநில சுயாட்சி-கருணாநிதி கருத்துக்கு சிபிஐ ஆதரவு
சென்னை: தமிழர்களின் பாரம்பரியப் பகுதியில், சிங்களர்கள் குடியமர்த்தப்படுவதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசு ரூ. 500 கோடி கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த உதவி தொகை இலங்கை அரசிடம் வழங்கப்படுவதால் அது பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்று சேருகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.
தமிழர் பகுதிகளில் சிங்களர்களை புகுத்த கூடாது...
முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்து போன்ற உதவிகளை செய்ய வேண்டும். அவர்களை தங்கள் சொந்த வீடுகளில் மீண்டும் குடியமர்த்த வேண்டும். தமிழர்களின் பகுதிகளில் இலங்கை அரசு சிங்களர்களை புகுத்த கூடாது.
இந்திய அரசு நாம் என்ன முடியும் என்ற நிலையில் இருந்து மாற வேண்டும். இலங்கையில் அரசியல் தீர்வு காண வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கும் உள்ளது என்பதை உணர வேண்டும்.
கச்சத்தீவில் இலங்கை ராணுவ தளத்தை அமைக்க இருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரக்கூடியது. இந்திய மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு கச்சத்தீவு உடன்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
முதல்வர் கருணாநிதி தனது 86வது பிறந்தநாள் விழாவின் போது மாநில சுயாட்சியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவேன் என சூளுரைத்தார்.
கருணாநிதியின் இந்த வேண்டுகோளில் எந்த தவறும் கிடையாது. மாநிலங்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரங்கள் கூடுதலாக அளிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி உரையை எதிர்க்கிறோம்...
ஜனாதிபதி உரையில் அரசின் வருமானத்தை பெருக்க, நிதி ஆதாரத்தை அதிகரிக்க பொதுத் துறை நிறுவனங்களின் 49 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது தான் ஒரே தீர்வு என கூறப்பட்டுள்ளது. இதை இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கும். இது இந்திய பொருளாதாரத்தை எந்த வகையிலும் காப்பாற்றாது.
பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக செய்ய இந்திய அரசை பெரிய நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கின்றன. அப்படி செய்தால் இது சாதாரண மக்களின் அரசாக இருக்க முடியாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் வரும் ஜுலை 3ம் தேதியும், தேசிய குழு கூட்டம் 4 முதல் 6ம் தேதி வரையிலும் டெல்லியில் நடக்கிறது என்றார் டி.ராஜா.