பாஜகவிலிருந்து விலகும் திட்டம் இல்லை - யஷ்வந்த் சின்ஹா
ராஞ்சி: கட்சித் துணைத் தலைவர் பொறுப்பு உள்ளிட்டவற்றிலிருந்து விலகினாலும், கட்சியிலிருந்து விலக மாட்டேன் என்று மூத்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களை நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பாஜகவுக்குள் பெரும் பூசல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று கட்சித் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, கட்சியில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்ததால் பாஜக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் சின்ஹா. அப்போது அவர் கூறுகையில், எனது ராஜினாமாவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் தொடர்ந்து கட்சியில் சாதாரண தொண்டராக செயல்படுவேன்.
நான் அனுப்பிய ராஜினாமாவை கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் மகிழ்ச்சி அடைவேன். இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை.
நான் தொடர்ந்து பாஜகவில்தான் இருப்பேன். இப்போதும் பாஜகவில்தான் இருக்கிறேன், எப்போதும் பாஜகவில்தான் இருப்பேன் என்றார் சின்ஹா.