4 வயது குழந்தை கடத்தல் - மின்னல் வேகத்தில் மீட்ட போலீஸ் - ஆட்டோ டிரைவர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 4 வயதுக் குழந்தையை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடத்திச் சென்றார். இந்த சம்பவத்தில் படு வேகமாக செயல்பட்ட போலீஸார் வீடு வீடாக சோதனையிட்டு கடத்தப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டு ஆட்டோ டிரைவரைக் கைது செய்தனர்.

சென்னை கொட்டிவாக்கம் காவேரி நகரை சேர்ந்தவர் பாஸ்கரன். தோட்ட தொழிலாளி. இவரது மனைவி விமலா.

இந்தத் தம்பதிக்கு பாலா (6), பாலாஜி (4) என இரு குழந்தைகள் உள்ளனர். சொந்த ஊர் தஞ்சை அருகே உள்ள கண்ணகி தேக்கூர்.

உறவினரின் காதுகுத்து விழாவுக்கு செல்வதற்காக தனது 4 வயது குழந்தை பாலாஜியுடன் நேற்று இரவு கொட்டிவாக்கத்தில் இருந்து 51சி பஸ்சில் தாம்பரம் புறப்பட்டார் பாஸ்கரன்.

பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், சீட்டில் உட்கார்ந்து இருந்த ஒருவர் குழந்தையை தன் கையில் கொடுக்குமாறு கேட்டார். பாஸ்கரனும் குழந்தையை கொடுத்தார். சிறிது நேரத்தில் அவருக்கும், சீட்டு இருக்கை கிடைத்தது.

உடனே தனது குழந்தையை தருமாறு அவர் கேட்டார். இருப்பினும் அந்த நபர், பஸ்ஸை விட்டு இறங்கும்போது தருகிறேன் என்று கூறி குழந்தையை கொஞ்சியபடி வந்துள்ளார்.

சரி என்று பாஸ்கரன் விட்டு விட்டார். சிறிது நேரத்தில் பாஸ்கரனுக்கு தூக்கம் வந்து விட்டது. இதனால் கண்ணயர்ந்து விட்டார்.

இந்த நிலையில், பஸ் மேடவாக்கம் வந்தது. அப்போது திடீரென பாஸ்கரனுக்கு விழிப்பு வந்தது. கண் விழித்துப் பார்த்தபோது குழந்தையுடன் இருந்த நபரைக் காணவில்லை.

அப்போதுதான் தனது குழந்தையை அந்த பக்கத்து சீட் ஆசாமி கடத்தி விட்டதை உணர்ந்து அலறினார் பாஸ்கரன்.

அக்கம் பக்கத்துப் பயணிகள், அந்த மர்ம ஆசாமி பெரும்பாக்கத்தில் இறங்கியதாக தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தை அணுகி தெரிவித்தார் பாஸ்கரன்.

புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டின் உத்தரவின் பேரில் போலீஸ் படை பெரும்பாக்கம் விரைந்தது.

அந்தப் பகுதியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு முழுமையாக சோதனையிடப்பட்டு அனுப்பப்பட்டன. மேலும், பெரும்பாக்கத்தில் உள்ள வீடுகளில் முழு அளவில் சோதனையிட வீடு வீடாக போலீஸார் சென்று சோதனை போட்டனர்.

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பில் மூழ்கியது. அப்போது எம்.ஜி.ஆர். நகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் போலீஸார் நுழைந்தபோது ஒரு குழந்தை தொடர்ந்து அழுதபடி இருந்ததை அறிந்து அங்கு விரைந்தனர்.

அந்தக் குழந்தை வேறு யாருமல்ல கடத்தப்பட்ட பாஸ்கரனின் குழந்தைதான். குழந்தையை கடத்தி வந்த ஆசாமியும் அங்கேயே இருந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

அந்த நபரின் பெயர் ராஜன், ஆட்டோ ஓட்டி வருகிறார். அவருக்கு குழந்தை இல்லையாம். இதனால் குழந்தை ஏக்கத்தில் இக்குழந்தையை கடத்தி வந்து விட்டாராம்.

கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீஸார் படு துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட செயல் அப்பகுதியினரிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.

குழந்தையை இழந்து தவித்துப் போய் விட்ட பாஸ்கரன், போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+