பணத்தால் வெல்வதை விட தோற்றுப் போவது மேல் -வைகோ
மதுரை: ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் மதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவ வீரர்களால் தோற்கடிக்கப்படவில்லை. இந்திய அரசின் துரோகத்தால், தோற்கடிக்கப் பட்டுள்ளனர். அது தான் உண்மை.
இந்திய அரசு, சிங்கள அரசோடு சதி செய்து, யுத்தம் நடத்தியது. விடுதலை புலிகளுக்கு எந்த பொருட்களும் போக விடாமல் தடுத்து, இலங்கைக்கு ஆயுதங்களையும் கூடவே வழங்கியது.
தமிழகத்தில் மதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என சிலர் முயற்சி செய்கின்றனர். அது எந்த காலத்திலும் நடக்காது.
தமிழக அரசு செய்த துரோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து தான் திமுகவினரும், காங்கிரசாரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆயுதத்தை ஆயுதத்தால் தான் வெல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்றார்.