புதன்கிழமை கூடும் சட்டசபை-25 நாட்கள் நடக்கும்
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் புதன்கிழமை மீண்டும் கூடுகிறது. 25 நாட்களுக்கு சபை நடைபெறும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 27ம் தேதி வரை இக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் விவாதம் தொடங்கியது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால் குறுகிய காலமே அந்தக் கூட்டத் தொடர் நடைபெற்றது.
இதையடுத்து வருகிற 17ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.
இக்கூட்டத் தொடர் குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் ஆவுடையப்பன் பேசுகையில், சட்டசபை கூட்டம் வரும் 17-ந் தேதி (புதன்கிழமை) தொடங்க உள்ளது. இதில் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும்.
இந்த கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று எனது தலைமையில் நடந்தது.
இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், துணை சபாநாயகர் துரைசாமி, அரசு தலைமை கொறடா சக்கரபாணி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மற்றும் ஆறுமுகம் (பா.ம.க.), நன்மாறன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு) சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை சென்று உள்ளதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் எடுத்த முடிவின்படி வரும் புதன்கிழமை முதல் அடுத்த மாதம் (ஜுலை) 21-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும். இதில் விடுமுறை நாட்கள் தவிர 25 நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கிறது.
அப்போது மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்றார்.
மு.க.ஸ்டாலின் துணை முதல்வரான பின்னர் பங்கேற்கவுள்ள முதல் கூட்டத் தொடர் என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
துணை முதல்வராகியுள்ளதால், அவரது இருக்கையும் மாறுகிறது. இதுவரை நான்காவது இடத்தில் அமர்ந்திருந்த அவர் இனிமேல் அமைச்சர் அன்பழகனுக்கு அடுத்த இடத்தில், அதாவது 3வது இடத்தில் அமருவார்.
சட்டசபைத் தொடரில், அரசுத்துறைகளின் மானிய கோரிக்கைகளும், அவற்றின் மீதான விவாதங்களும் நடைபெறும். இத்தொடரில் 51 மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.
இந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து முடிந்தபிறகு, அந்தந்த துறைகளின் அமைச்சர்களின் பதிலுரைகளும் இடம்பெறும்.
இந்த கூட்டத் தொடரில், இலங்கை தமிழர் பிரச்சினை புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. மேலும் லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சி பெரும் முறைகேடுகளை செய்ததாக அதிமுகவும், பாமகவும் குற்றம் சாட்டியுள்ளன. அதுவும் பிரச்சினையை எழுப்பும் எனத் தெரிகிறது.
ஆட்சியில் பங்கு கேட்டு மீண்டும் திமுகவை நெருக்க ஆரம்பித்திருக்கும் காங்கிரஸ் தரப்பிலும் இந்த முறை வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் ஆதரவுடன் தான் திமுக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications