நெல்லை அருங்காட்சியகத்தில் சாமி சிலைகள் திருட்டு
நெல்லை: நெல்லையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் புகுந்த சிலர், அங்கிருந்த பழங்காலத்து சாமி சிலைகளை திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை எஸ்.பி அலுவலகம் அருகே அரசு அருட்காட்சியகம் உள்ளது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்து பராம்பரியம் மிக்க சாமி சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதன் காப்பாளராக கிருஷ்ணம்மாள் மற்றும் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வராந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் அருட்காட்சியகத்திற்கு வருவர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி வியாழக்கிழமை மாலை அருட்காட்சியகத்தை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று காலை ஊழியர்கள் அருட்காட்சியகத்தை திறக்க சென்றனர்.
அப்போது அருட்காட்சியக வெளிபக்க கதவு மற்றும் உள்அறைகளின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த சாமி சிலைகள் கொள்ளை போயிருந்தன.
இதுகுறித்து பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
2 அடி காளி வெண்கல சிலை, முருகன், விநாயகர், ராமர் ஆகியோரின் 1 அடி வெண்கல சிலை; மற்றும் நடனமாடும் பெண், தேவி பித்தளை சிலைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
கொள்ளை போன சிலைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.