தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - டிஜிபி
கோவை: தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி கே.பி. ஜெயின் கூறியுள்ளார்.
கோவை வந்திருந்த டிஜிபி ஜெயின், புதிதாக கட்டப்பட்ட சரவணம்பட்டி காவல் நிலையம், ஆலந்துறை புதிய காவல் நிலைய கட்டடங்களை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக தீவிரவாதிகள் உள்ளிட்டோர் ஊடுறுவாமல் தடுப்பதற்காக அப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பும், பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4 இடங்களில் தேசிய பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த வாரம் தேசிய பாதுகாப்பு படையினர் வர உள்ளனர். அவர்கள் அசோக் நகர் காவலர் பயிற்சிக் கல்லூரியில் தங்க வைக்கப்படுவர்.
வாகனப் பெருக்கத்தாலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலும் விபத்துகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த சென்னையில் டிராஃபிக் பிளானிங் செல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் டிராஃபிக் பிளானிங் செல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கனவாய்புதூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் திறமையாகச் செயல்பட்டு 24 மணிநேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 12 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கடலோரப் பாதுகாப்பு படையினர் ரோந்து செல்ல ரூ.2.10 கோடி மதிப்பில் ஐ-டெக் விசைப்படகு கிரீஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் 12 விசைப் படகுகள் வாங்கப்படும். விரைவில், இப் படகுகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்த்தப்படும்.
தமிழகக் காவல்துறை ரூ.51 கோடியில் நவீனப்படுத்தப்பட்ட உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்கள் சொந்தக் கட்டடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.