ஆஸியில் தொடரும் இனவெறி தாக்குதல் - மீண்டும் ஒரு இந்தியருக்கு அடி உதை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் தினசரி சம்பவமாகி விட்டது. இந்திய மாணவர் ஒருவர் அவமரியாதை செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் மெல்போர்ன் நகரில் நடந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளாகியுள்ள 14வது இந்தியர் இவர்.
மெல்போர்ன் கிழக்கு புறநகரில், 20 வயதாகும் சன்னி பஜாஜ் என்ற இந்திய மாணவரை, இரண்டு பேர் சேர்ந்து தடுத்து நிறுத்தி அவமரியாதை செய்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்து விட்டு ஓடி விட்டனர்.
பொரோனியா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தி ஏஜ் இதழுக்கு பஜாஜ் அளித்துள்ள பேட்டியில், நான் காரில் ஏறப் போனபோது இருவர் என்னிடம் வந்து பணம் கேட்டனர். என்னிடம் இல்லை என்று நான் கூறியதும் என்னை அவர்கள் தாக்கினர் என்றார்.
பஜாஜ், டீக்கின் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். டெல்லியைச் சேர்ந்தவர் இவர்.
தொடர்ந்து பஜாஜ் கூறுகையில், எனது கார் கதவின் மீது என்னை மோத வைத்தனர். பின்னர் தலையில் குத்தினர். வயிற்றில் குத்தினர். பின்னர் இந்தியாவின் பெயரைக் குறிப்பிட்டு அசிங்கமாக பேசினர் என்றார்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு 20 வயதுக்குள்தான் இருக்கும் என்றும் பஜாஜ் தெரிவித்துள்ளார். ஒருவர் வெள்ளையர் என்றும், இன்னொருவர் கருப்பர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 14 பேர் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications