மீண்டும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த திட்டம்!
டெல்லி: மீண்டும் பெட்ரோல்-டீஸல் விலையை உயர்த்தும் திட்டத்தில் உள்ளது மத்திய அரசு. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்பதை சூசகமாக நேற்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இந்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பின், பிரணாப் முகர்ஜியை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்துப் பேசினார்.
கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்களைத் தாண்டிவிட்டது குறித்தும், இதனால் உயர்த்தப்பட வேண்டிய விலைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, "கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இருந்தாலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் வந்து விட்டது..." என்றார்.
பின்னர் நிதியமைச்சரைச் சந்தித்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, "கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பட்ஜெட்டின் போது முடிவு செய்யப்படும். இதற்கான கால அவகாசம் எதையும் தெரிவிக்க முடியாது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்வது பற்றியும் அப்போது முடிவு செய்யப்படும்..." என்றார்.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்துவிட்டால், அடுத்த கணமே, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல் விற்பனை அமையும். இப்போதுள்ள விலையைவிட ரூ.5 கூடுதலாக விலை வைக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications