மனைவி, மாமியாரை எரித்துக் கொல்ல முயன்றவருக்கு வலைவீச்சு
மதுரை: குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியையும், அனுப்ப மறுத்த அவரது தாயாரையும் எரித்துக் கொலை செய்ய முன்ற வழக்கில் தலைமறைவான கணவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாட்டுதாவணியில் பழ வியாபாரம் செய்து வருபவர் முருகபாண்டி. இவரது மனைவி முத்துலெட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், முத்துலெட்சுமியை போனில் தொடர்பு கொண்டு பேசிய முருகபாண்டி, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு அழைத்துள்ளார்.
ஆனால், அதற்கு முத்துலெட்சுமி மறுத்து விட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த முருகபாண்டி, முத்துலெட்சுமியை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், முத்துலெட்சுமியும், அவரது தாயும் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும், முருகபாண்டி தங்களை கொலை செய்ய முயன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகபாண்டியை தேடி வருகின்றனர்.