ரஷ்யாவில் மன்மோகன் சிங், சர்தாரி சந்திப்பு - கை குலுக்கினர்
மாஸ்கோ: ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் இன்று சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
3 நாள் பயணமாக மன்மோகன் சிங் நேற்று ரஷ்யா கிளம்பினார் மன்மோகன் சிங். அங்குள்ள யெகடரின்பர்க் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்கிறார்.
பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பாக இதில் விவாதிக்கப்படவுள்ளது. ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பார்வையாளராக பங்கேற்கிறார்.
இந்த நிலையில் இரு தலைவர்களும் இன்று சந்தித்துக் கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு முன்பாக இரு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்டு பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஷாங்காய் அமைப்பின் உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து புகைப்படக்காரர்களுக்குப் போஸ் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் மன்மோகன் சிங், சர்தாரியும் கலந்து கொண்டனர். அது முடிந்த பின்னர் இரு தலைவர்களும் கை குலுக்கியபடி சந்தித்துக் கொண்டனர்.
மாநாட்டுக்கு இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
முன்னதாக சிங், சர்தாரி சந்திப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்முத் குரேஷி கூறுகையில்,
இந்த சந்திப்பு, வரவேற்கத்தக்க நிகழ்வு. இது பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும். இது முக்கியமான தலைவர்கள் நடத்தும் முக்கியமான சந்திப்பு. இதன் முடிவு பற்றி இப்போதே தீர்மானிக்க முடியாது. சந்தித்த பிறகு இதுபற்றி விரிவாக பேசுவோம். இச்சந்திப்புக்கான கால அளவு ஒரு பொருட்டே அல்ல என்றார்.
இந்த மாநாடு தவிர இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா ஆகிய நான்கு நாடுகள் அடங்கிய 'பிரிக்' (BRIC) அமைப்பின் உச்சி மாநாடும் நாளை நடைபெறுகிறது. இதிலும் சிங் பங்கேற்கிறார்.
இதில் பொருளாதார மந்தம், பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜி-20 மாநாட்டு செயல்திட்டப்படி இந்த விவாதம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications