இந்தியாவில் வேகமாக பரவும் ஸ்வைன் - இதுவரை 35 பேர் பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நேற்று நான்கு பேருக்கு டெல்லியில் அடையாளம் காணப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை 35 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அலைக்கழித்து வரும் பன்றிக் காய்ச்சல் இப்போது இந்தியாவையும் பீதிக்குள்ளாக்கி வருகிறது.
டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று டெல்லியில் 35 வயதுப் பெண்ணுக்கும், 3 சிறார்களுக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தற்போது 35 பேர் இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஸ்வைன் அறிகுறி காணப்பட்ட பெண்ணும், அவரது 6 வயது மகனும் ஜூன் 11ம் தேதி சிகாகோவிலிருந்து டெல்லி வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. அதேபோல இன்னொரு சிறுவன் 17 வயதுடையவன். வாஷிங்டனிலிருந்து இவன் வந்தான். கனடாவிலிருந்து வந்த இன்னொரு சிறுவனுக்கு வயது 10.
நான்கு பேருக்குமே பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது டெல்லியில் மட்டும் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பி விட்டனர்.
ஹைதராபாத்தில், குவைத்திலிருந்து திரும்பிய 30 வயது நபருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் 5 பேரின் நிலை மேம்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.