'கம்யூனிஸ்ட்டுகள் துரோகத்தால் 58.., 28 ஆனது'!
சென்னை: மத்திய அரசுக்கு தந்த ஆதரவை வாபஸ் பெற்று இடதுசாரிகள் துரோகம் செய்துவிட்டதாக சட்டமன்றத்தி்ல் காங்கிரஸ் எம்எல்ஏ சேகர் கூறியதற்கு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் மின்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தபோது காங்கிரஸ் எம்எல்ஏ விடியல் சேகர் பேசுகையில்,
கடந்த மக்களவையில் 58 கம்யூனி்ஸ்ட் எம்பிக்கள் இருந்தார்கள். மத்திய அரசு அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்தது. இதன்மூலம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மின்சார பற்றாக்குறை நீங்கும்.
ஆனால், கம்யூனிஸ்டுகள் மக்களைப் பற்றி சிந்தி்க்காமல் அணு சக்தி ஒப்பந்தத்தை காரணம் காட்டி மத்திய அரசுக்கு ஆதரவை திரும்பப் பெற்றனர்.
இந்த துரோகச் செயலால் 58 ஆக கம்யூனிஸ்ட் எம்பிக்களின் எண்ணிக்கை இம்முறை 28 ஆகக் குறைந்துவிட்டது என்றார்.
அப்போது மார்க்சி்ஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி குறுக்கிட்டு, கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்தப் பதவியையும் பெறாமல் மதவாத சக்திகள் ஆட்சிக்க வந்துவிடக் கூடாது என்ற காரணத்துக்காக மத்திய அரசுக்கு ஆதரவு தந்தோம்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்களுக்கு மாற்றுக் கருத்து ஏற்பட்டது. அதைத் தான் மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்றோம். இது துரோகமா? என்றார்.
தொடர்ந்து பேசிய சேகர், கம்யூனிஸ்ட்டுகளுக்கு சீனாவைத் தவிர வேறு கொள்கையே கிடையாது என்றார்.