கச்சத் தீவில் கடற்படை தளம் அமைக்கவில்லை-இலங்கை
கொழும்பு: கச்சத்தீவில் தளம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை கடற்படைத் தளமாக மாற்ற இலங்கை அரசு முயன்று வருகிறது. இதை அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை சீரமைக்கும் பணியில் மும்முராக இலங்கை தரப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதி இதுகுறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த நிலையில், கடற்படைத் தளம் அமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் தசநாயகே கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி கச்சத்தீவில் படை முகாம் அமையவுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறாகும்.
இப்படி ஒரு திட்டமோ, எண்ணமோ இலங்கை கடற்படையிடம் இல்லை. எதிர்காலத்திலும் கூட இப்படி ஒரு திட்டம் எங்களிடம் இல்லை.
மேலும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஒருபோதும் துன்புறுத்தியதில்லை. இது குறித்து கருணாநிதி கூறியுள்ள கருத்தும் கூட உண்மையில்லை. முற்றிலும் தவறானது. இந்திய மீனவர்களை நாங்கள் தாக்குவதே இல்லை. கச்சத்தீவுப் பகுதியை இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்தே பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு நாங்கள் இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். எனவே இதில் பிரச்சினை ஏதும் இல்லை.
கச்சத்தீவைப் பொறுத்தவரை அதன் சட்டப்பூர்வ உரிமையாளர் இலங்கைதான் என்றார் தசநாயகே.
மாலத்தீவு அதிபர் இலங்கை வருகை...
இதற்கிடையே, மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் நேற்று 2 நாள் பயணமாக இலங்கை வந்தார். விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்த பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நஷீத்தான்.
வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவை இன்று நஷீத் சந்தித்துப் பேசுகிறார். அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்திக்கிறார்.