திருச்சி: காரில் இருந்த ரூ.50 லட்சம் மாயம்
திருச்சி: திருச்சியில் காருக்குள் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அயிலூத்து பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (37). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.
இவர், சமீபத்தில் 20 ஏக்கர் நிலத்தை 50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். வங்கியில் செலுத்தியிருந்த 50 லட்சத்தை நேற்று முன்தினம் எடுத்த மகாராஜன், அதை சூட்கேசில் வைத்து சென்னைக்கு எடுத்துச் செல்ல கொண்டு சென்றார்.
இவர் பயணித்த இன்னோவா காரை அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் தங்கவேல் ஓட்டினார்.
பணத்துடன் செல்ல வேண்டியிருந்ததால் வக்கீல் மதன்குமார், நண்பர் முத்துக்குமாரை அழைத்துக் கொண்டு மகாராஜன் புறப்பட்டார்.
இந்த நிலையில், துவரங்குறிச்சியை அடுத்த கோவில்பட்டி என்னுமிடத்தில் காரை நிறுத்திய மகாராஜன், நண்பர்களுடன் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். அதன் பின்பு, காரில் புறப்பட்ட அனைவரும், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள ராஜா ஓட்டலில் அசைவ உணவு சாப்பிடச் சென்றனர்.
அப்போது காரை பூட்டிய டிரைவர் தங்கவேலிடம் இருந்து கார் சாவியை மகாராஜன் வாங்கிக் கொண்டதாகவும், அனைவரும் சாப்பிட்ட பின் பில் தொகை கொடுப்பதற்காக
சாவியை கொடுத்து காரில் இருந்து பணம் எடுத்து வருமாறு கூறியதாக கூறப்படுகின்றது.
காருக்கு சென்ற டிரைவர் தங்கவேல், காரை திறந்த போது அதில் இருந்த சூட்கேஸ் மாயமானது குறித்து மகாராஜனிடம் கூறியுள்ளார். கார் திறக்கப்படாத நிலையில் பணம் மாயமானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இது குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் மகாராஜன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முதற்கட்டமாக டிரைவர் தங்கவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தகவல் ஏதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.