தாயாரை விடுதலை செய்ய உதவுங்கள் - பிரதீபாவுக்கு வீரப்பன் மகள் கோரிக்கை
சென்னை: மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எனது தாயாரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முத்துலட்சுமியை விடுதலை செய்ய உதவுங்கள் என்று கோரி அவரது மகள் வித்யாராணி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதியின் மூத்த மகள்தான் வித்யாராணி. 18 வயதாகும் வித்யாராணி தற்போது பி.ஏ படித்து வருகிறார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு தனது தாயார் கர்நாடக போலீஸாரால் கைது செய்யப்பட்டதிலிருந்து வித்யாராணி பெரும் கவலையில் இருந்து வருகிறார்.
இதையடுத்து தனது தாயாரை விடுதலை செய்ய உதவ வேண்டும் என்று கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார் வித்யாராணி. அதேபோல பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், வீரப்பன் மகளான நான் (வித்யாராணி) உங்கள் உதவி கோரி இந்த கடிதம் எழுதி உள்ளேன். நான் என் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டேன். அதன் பிறகு எங்களுக்கு பலவித சோதனைகள் ஏற்பட்டாலும் என் தாய் எங்களுடன் இருந்ததால் ஆறுதலாக இருந்தது.
என் தந்தை செய்த செயல்கள் சட்ட விரோதமானவை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எனவே தான் அரசு அவரைத் தண்டித்தது. அவர் மரணத்தில் இருந்து மீள்வதற்குள், என் தாயை கர்நாடக போலீசார் என்னிடம் இருந்து பிரித்து அழைத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
சிறையில் அவர் உடல் நலம் இல்லாமல் வாடுகிறார். நாங்களும் தவிப்புன் உள்ளோம்.
என் தாயார் வீரப்பனுடன் வாழ்ந்தது 3 மாதங்கள் மட்டுமே. அவர் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. வீரப்பனை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக என் தாயை தண்டிப்பது என்ன நியாயம்?
என் தாயை விடுவிக்க உதவும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் எந்த சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்றும் உறுதி அளிக்கிறோம்.
பெற்றோரை பிரிந்து நான் தன்மையில் வாடுகிறேன். என் வாழ்வில் அமைதி ஏற்பட உதவும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியுள்ளார் வித்யாராணி.