200 அடி ஆழ போர்வெல் குழியில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு
ஜெய்ப்பூர்: 200 அடி ஆழம் கொண்ட ஆழ் துளை கிணற்றில், 50 அடி ஆழத்தில் விழுந்து பரிதவித்த 4 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள்.
ராஜஸ்தான் மாநிலம் மோராடி கிராமத்தில், அஞ்சு என்ற சிறுமி, அங்கிருந்த 200 அடி ஆழ ஆழ் துளைக் கிணற்றில் நேற்று மாலை விழுந்து விட்டாள்.
குழியில் விழுந்த சிறுமி 50 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டாள். இருப்பினும் சிறுமி உயிருடன் இருந்ததால் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
அஞ்சு விழுந்த குழிக்கு அருகில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. எட்டுக்கு எட்டு என்ற அளவில் அந்தப் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும், அஞ்சுவுக்கு ஆக்சிஜனும் மேலிருந்து அனுப்பப்பட்டது.
நேற்று இரவு முழுவதும் இந்தப் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் வாக்கில் அஞ்சு இருந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் பக்கவாட்டுக் குழி வழியாக அடைந்தனர். இதையடுத்து அஞ்சு பத்திரமாக மீட்கப்பட்டாள்.
மயக்க நிலையில் இருந்த அஞ்சு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 22 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் அஞ்சுவை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
அஞ்சு உயிருடன் மீட்கப்பட்டதால் கிராமத்தினர் சந்தோஷமடைந்தனர்.
கடந்த 2006ம் ஆண்டு இதேபோல 60 அடி போர்வெல் பள்ளத்தில் விழுந்து மாட்டிக் கொண்ட சிறுவன் பிரின்ஸ் 2 நாள் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications