மாவோயிஸ்டுகள் விரட்டப்பட்டனர் - அரசு வசம் லால்கர்
கடந்த சில மாதங்களாகவே லால்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்கள் நக்சலைட்டுகள் பிடியில் இருந்து வருகிறது. அப்பகுதி பழங்குடியினரை திரட்டி மக்கள் கமிட்டி என்ற பெயரில் அரசுப் படையினருடன் மோதி வந்தனர் நக்சலைட்கள்.
மேலும் பல்வேறு பகுதிகளைப் பிடிக்கவும், முதல்வர் புத்ததேவ் பட்டசார்யாவை கொல்லவும் நக்சலைட்டுகள் உறுதி பூண்டதைத் தொடர்ந்து அரசு நடவடிக்கையில் இறங்கியது.
போலீஸாருக்கு உதவியாக பல்வேறு துணை ராணுவப் படையினர் களம் இறக்கப்பட்டனர். நக்சலைட்டுகள் பிடியிலிருந்த லால்கர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை மீட்க கடந்த சில நாட்களாக கடும் போராட்டம் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று லால்கர் நகரைப் பிடித்தது துணை ராணுவப் படை. அங்கு புகுந்த துணை ராணுவப் படையினர் நக்சலைட்களுடன் பல இடங்களில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினருக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், நக்சலைட்கள் சேதம் குறித்துத் தெரியவில்லை.
துணை ராணுவப் படையினர் பெருமளவில் புகுந்து விட்டதால் நக்சலைட்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து லால்கர் காவல் நிலையத்தையும், நகரையும் துணை ராணுவப் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லால்கர் நகரைப் பிடித்த துணை ராணுவமும், போலீஸும், மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள வேறு சில பகுதிகளையும் பிடித்துள்ளனர்.
இதுகுறித்து மேற்கு மிதினாப்பூர் சரக டிஐஜி பிரவீன் குமார் கூறஉகையில், முதல் முறையாக சாலை மார்க்கமாக போலீஸாரால் செல்ல முடிந்துள்ளது. இந்தப் பணி மிகக் கடுமையாக இருந்தது. இருப்பினும் இதை செய்து காட்டி விட்டோம். தற்போது சட்டத்தின் கீழ் லால்கர் வந்துள்ளது.
மாவோயிஸ்டுகள் பெயரில் யாராவது சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
லால்கரைப் பிடித்து விட்டாலும் கூட மேலும் பல்வேறு கிராமங்கள் இன்னும் நக்சலைட்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய பழங்குடியினர் கையில்தான் உள்ளது. அவற்றை மீட்கும் வரை நக்சலைட்களுக்கு எதிரான போர் முடியாது என மேற்கு வங்க அரசு கூறியுள்ளது.
லால்கருக்கு அருகே உள்ள கிராமத்தில் தற்போது மாவோயிஸ்டுகளும், பழங்குடியினரும், உள்ளூர் கிராமத்தினரோடு இணைந்து போலீஸாரை எதிர்க்கத் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் தயார் எனவும், போலீஸாரின் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் கூறியுள்ளனர். ஆனால் அதை அரசு ஏற்காது எனத் தெரிகிறது.