மின்னனு எந்திரங்களை 100% நம்பலாம்-கோபால்சாமி
சென்னை: மின்னனு எந்திரத்தில் எந்த மோசடியும் செய்ய முடியாது. அவற்றை 100 சதவீதம் நம்பலாம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி எதிர்பாராத வெற்றி பெற்றது. இதையடுத்து எதிர்கட்சிகள் மின்னனு எந்திரத்தில் மோசடி செய்யப்பட்டதாகவும், அதனால் அடுத்து நடக்கவிருக்கும் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடை தேர்தலில் மின்னனு எந்திரத்தை பயன்படுத்த கூடாது எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் என். கோபால்சாமி இந்த எந்திரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மின்னனு இயந்திரம் என்பது தனித்து இயங்க கூடியது. அதை முழுமையாக நம்பலாம்.
மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் பயன்படுத்திய மின்னனு இயந்திரங்களை ஒற்றை வழி தொடர்பு கொண்டவை. அதிலிருக்கும் சாப்ட்வேர் சிப்புகளை யாராலும் எந்த வகையிலும் சேதப்படுத்த முடியாது.
கடந்த தேர்தலில் சில இடங்களில் மின்னனு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இது மொத்த அளவில் வெறும் 0.5 சதவீதம் தான். தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 448 பேர் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுக்களை பெறாதவர்கள் என்றார் அவர்.