மீண்டும் யாத்திரை கிளம்பும் அத்வானி!
டெல்லி: பாஜகவை பலப்படுத்த மீண்டும் தேசிய அளவில் யாத்திரை செய்து அக் கட்சியின் தலைவர் அத்வானி திட்டமிட்டுள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்யும் தேசிய யாத்திரையை நடத்தப் போவதாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் இறுதியில் அத்வானி தகவல் வெளியிட்டார்.
கடந்த 1990ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமலாக்குவதாக அறிவித்தவுடன், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற அறிவிப்புடன் திடீரென அத்வானி நாடு தழுவிய ரத யாத்திரையை மேற்கொண்டார்.
அந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு கிடைத்தது. மேலும் அந்த யாத்திரை தேசிய அளவில் பாஜகவை மாபெரும் கட்சியாக மாற்றியது. யாத்திரை நடந்து கொண்டிருந்தபோதே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந் நிலையில் அவரை பிகாரில் வைத்து கைது செய்து யாத்திரை தொடர்வதைத் தடுத்தார் அப்போதை அம் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ்.
இதையடு்த்து 1997ம் ஆண்டில் இந்திய சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அத்வானி யாத்திரை நடத்தினார். இதற்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை.
அதே போல 2004ம் ஆண்டு தேர்தலின்போதும் நாடு தழுவிய யாத்திரையை அத்வானி மேற்கொண்டார். ஆனால், அதற்கும் தோல்வியே கிடைத்தது. 1990ல் கிடைத்த ஆதரவில் ஒரு பகுதி கூட இதற்குக் கிடைக்கவில்லை. மேலும் இந்த யாத்திரையைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.
இந் நிலையில், பாஜகவை பலப்படுத்த மீண்டும் தேசிய யாத்திரையை அத்வானி மேற்கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications