ராகிங் கொடுமை-கோமாவில் இருந்த மாணவர் பலி
சென்னை: சீனியர் மாணவரால் ராகிங் செய்யப்பட்டு, இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, கடந்த 9 மாதங்களாக கோமா நிலையில் இருந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவர் ஏலக்காய் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெங்கடேசன், சேதுராமன், ராஜ்குமார் என மூன்று மகன்கள்.
ராஜ்குமார் (21), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு பி.இ., எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் நேரடியாக 2வது ஆண்டில் சேர்ந்தார்.
கல்லூரியில் உள்ள விடுதியில் ராஜ்குமார் தங்கி படித்து வந்தார். அந்த கல்லூரியில் இசிஇ மாணவர்களுக்கும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வகுப்புகளை சேர்ந்த சீனியர் மாணவர்கள் இசிஇ மாணவர்களை ராக்கிங் செய்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக் கேட்டதற்காக ராஜ்குமார் மீது பார்த்திபன் என்ற சீனியர் மாணவர் கோபம் கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி விடுதியில் தனது அறையில் இருந்த ராஜ்குமாரை பார்த்திபன் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியதாக கூறப் படுகிறது. இதில் பின் தலையில் காயமடைந்த ராஜ்குமார், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவரை உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து வில்லிவாக்கம் தெற்கு மாட வீதியில் ஒரு வீட்டில் வைத்து ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தினசரி ஒரு நர்ஸ் வந்து ராஜ்குமாரை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார்.
இது குறித்து உறவினர் ஒருவர் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராஜ்குமாரின் சிகிச்சைக்கு ஆன செலவு முழுவதையும் கல்லூரி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதை அடுத்து நிர்வாகத்தின் மீது அளிக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
ராஜ்குமாரை தாக்கிய மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவன் கைது செய்யப்பட வில்லை.கல்லூரி நிர்வாகம் ராக்கிங் செய்த பார்த்திபனை கல்லூரியை விட்டு நீக்கியது. அந்த மாணவன் முன்ஜாமீன் வாங்கிக் கொண்டு தலை மறைவாக இருக்கிறான்.
அவனை கைது செய்து இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ராஜ்குமார் மறைவைத் தொடர்ந்து பார்த்திபன் மீதான ராகிங் வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பார்த்திபனைக் கைது செய்ய போலீஸார் முயன்று வருகின்றனர்.