தர்மபுரி அருகே பல லட்சம் மோசடி-ஒருவர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே தொழிலாளர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வாங்கித் தரும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் இவருக்கு மாவட்டம் முழுக்க உள்ள தொழிலாளர்களிடம் நல்ல அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி தொழிலாளர்களிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி பாப்பாரப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளார்.
இதே போன்று, சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ. 30 லட்சத்துக்கும் மேல் வசூலித்ததாகத் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஓராண்டுக்கு மேல் ஆகியும் முருகேசன் சொன்னபடி கடனைப் பெற்றுத் தரவில்லை.
இதனால், பணம் கொடுத்த தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆவேசம் அடைந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையறிந்த முருகேசன்
திடீரென தலைமறைவானார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தர்மபுரி எஸ்.பி. சுதாகரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க பாப்பாரப்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரட்டார்.
அதன் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் முருகேசனை தேடி வந்தனர். அப்போது, முருகேசன் தனது வீட்டுக்கு வந்த போது அங்கு ரகசிய கண்காணிப்பில் இருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்பு, பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications