வணங்காமண் உதவிக் கப்பல் மீது கடற்படை சந்தேகம் - சென்னை துறைமுகத்தை விட்டு அகன்றது

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.
ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக அப்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் என்ன மாதிரியான சந்தேகம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சிக்கல் எழுந்து விடாமல் தடுக்கும் பொருட்டு வணங்காமண் கப்பல் சென்னை கடல் எல்லையிலிருந்து அகற்றப்பட்டு சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து வணங்கா மண் கப்பலின் சென்னை ஏஜென்ட் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இன்று கடற்படை அதிகாரிகள் பலர் கப்பலுக்குச் சென்று சோதனையிட்டனர்.
தீவிர சோதனை மற்றும் ஆய்வு நடத்திய அவர்கள் கப்பல் சந்தேகத்திற்கிடமான வகையில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் என்ன மாதிரியான சந்தேகம் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. சந்தேகத்திற்கிடமானது என்றால் என்ன என்று எங்களுக்குப் புரியவில்லை.
தற்போது சென்னை துறைமுகத்திலிருந்து சற்று தொலைவில் கப்பல் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலை சென்னை துறைமுகத்திற்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்பதா அல்லது மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கே கொண்டு செல்வதா என்பது குறித்து கப்பல் உரிமையாளருடன் நாங்களும், கப்பலின் கேப்டனும் பேசிக் கொண்டுள்ளோம்.
சென்னைக்குக் கொண்டு வந்து இங்கு பொருட்களை இறக்கி பின்னர் அவற்றை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications