ஏர் பிரான்ஸ் விபத்து: 11 பயணிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு-கருப்புப் பெட்டி சிக்கவில்லை
ரியோ டி ஜெனிரா: அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களில் இதுவரை 11 பேரின் அடையாளம் மட்டுமே தெரிந்துள்ளது. கருப்புப் பெட்டியும் இன்னும் கிடைக்காததால் அதிகாரிகள் டென்ஷனாக உள்ளனர்.
கடந்த 1ம் தேதி பிரேசிலின் ரியோ நகரிலிருந்து பாரீஸ் புறப்பட்டது ஏர் பிரான்ஸ் விமானம். அட்லான்டிக் கடல் மீது விமானம் பறந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது கடல் பகுதியில் தொடர்ந்து உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 50 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதறிய பாகங்கள் சிலவும் சிக்கியுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் பிரேசில் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இதுவரை 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்ற உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிப் போய் விட்டன.
இதற்கிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டி கிடைத்தால்தான் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது, கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்து. இது கிடைக்காவிட்டால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை அறியவே முடியாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா ரூ. 12 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.