கோஷியாரிடம் பணிந்த பாஜக-ராஜினாமா செய்யும் கந்தூரி

மக்களவைத் தேர்தலில் உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு படுதோல்வி கிடைத்தது. அங்குள்ள 5 தொகுதிகளிலும் அக் கட்சி தோற்றதையடுத்து அம் மாநில முதல்வர் கந்தூரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பகத் சிங் கோஷியாரி தலைமையில் எம்எல்ஏக்கள் போர்க் கொடி உயர்த்தினர்.
ஆனால், ஒரு மாநில தோல்விக்காக கந்தூரி மீது நடவடிக்கை எடுத்தால் தேசிய அளவில் கட்சியின் தோல்விக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்தனர் அத்வானி, ராஜ்நாத் சி்ங், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள்.
ஆனால் கந்தூரியை மாற்றியே ஆக வேண்டும் என்று வலியுறுத்திய பகத் சிங் கோஷியாரி தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நேற்று டெல்லிக்கு வந்த அவர் மாநிலத்தில் கட்சியை உடைக்கவும் தயங்க மாட்டேன் என்று எச்சரித்ததாகத் தெரிகிறது.
மாநில அதிருப்தி தலைவரை கட்டுப்படுத்தும் அளவுக்கு தேசியத் தலைவர்கள் பலமின்றி இருப்பதால் இதனால் வேறு வழியின்றி கந்தூரியை ராஜினாமா செய்யுமாறு பாஜக தலைமை இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
தன்னை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என பகத் சிங் கோஷியாரி கோரி வருகிறார். அவருக்குப் பதில் அவரது கோஷ்டியைச் சேர்ந்த வேறு ஒருவரை முதல்வராக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அவரது ராஜ்யசபா எம்பி ராஜினாமா கடிதத்தையும் கட்சி ஏற்கவில்லை. அவரை ராஜ்யசபா எம்பியாகவே வைத்துக் கொண்டு இன்னொருவரை முதல்வராக்கவுள்ளது பாஜக.
பதவியை ராஜினாமா செய்ய கந்தூரி ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications